கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பறக்க அனுமதிக்கவில்லை: பஞ்சாப் பிரசாரத்தில் மோடி பேச்சு

ஜலந்தர்: கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பஞ்சாப்பில் பறக்க அனுமதிக்கவில்லை என்று ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 117  தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின்   பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  சிரோமணி அகாலி தளம்  (சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஏற்கனவே பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் டெல்லி திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஜலந்தரில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன்னதாக, அவர் ஃபெரோஸ்பூர் பொதுக்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக  அங்கு நடத்தப்படவில்லை. மேலும் உள்ளூர் நிர்வாகம் சார்பில்  தேவி தாலாப்  கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்ல முடியவில்லை. இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி ஜலந்தரில் பேசுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அமிர்தசரஸில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது, ​​எனது ஹெலிகாப்டர் பறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அந்த  நேரத்தில், யுவராஜ் (ராகுல்காந்தி) பஞ்சாப்பில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அதனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி ஒரு குடும்பத்துக்காக  மட்டுமே ஆட்சி, அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. கடந்த  50 ஆண்டுகளுக்கு மேலாக தனது எதிரிகளை இப்படிதான் காங்கிரஸ் நடத்தியது. உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்த தேவி தாலாப்  கோயிலுக்கு தரிசனம் செய்ய கண்டிப்பாக வருவேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.