டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து மரணம்

புதுடெல்லி:
விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் திரைப்பட நடிகர் தீப் சித்து, சாலை விபத்தில் உயிரிழந்தார். அரியானாவில் உள்ள மேற்கு புற விரைவுச்சாலையில் இன்று நிகழ்ந்த விபத்தில் அவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள், கடந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசுத் தினத்தன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், கொடிகளை ஏற்றியும் போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்கு போராட்டத்தை தூண்டியதாக நடிகர் தீப் சித்து குற்றம்சாட்டப்பட்டார். இது தொடர்பாக இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.