ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதனால் தலிபான் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்காததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவியது. கடந்த டிசம்பர் மாதம் மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.

 

அதன் பின் 2 முறை மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை விமானத்தில் அனுப்பியது. கடந்த 10-ந் தேதி ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமைகளை இந்தியா அனுப்பியது.

இந்த நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. 3 டன் மருந்துகள், உடைகள் அனுப்பப்பட்டுள்ளன. குளிரை தாங்கக்கூடிய உடைகள் ஆப்கானிஸ்தானுக்கு  அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு தலிபான்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, இந்தியாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் மேம்படுத்துவதை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார்.

ஏற்கனவே இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பு மருந்து 5 லட்சம் டோஸ் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பியது. இந்த மருத்துவ உதவிகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்… பஞ்சாப் சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.