லட்சுமி தேவி சைக்கிளிலோ, யானை மீதோ வருவதில்லை… தாமரையில் அமர்ந்தே வருகிறாள்: ராஜ்நாத் சிங் பிரசாரம்

அமேதி:
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக பாஜக சார்பில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
அவ்வகையில் இன்று அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லட்சுமி தேவியை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மறைமுகமாக தாக்கினார். 
“லட்சுமி தேவி யாருடைய வீட்டிற்கும் சைக்கிளிலோ அல்லது யானை மீதோ அல்லது யாரோ ஒருவரின் கையில் அமர்ந்தோ வருவதில்லை. லட்சுமி தேவி தாமரை மீது அமர்ந்தே, மக்களுக்கு அருள்பாலிக்கிறாள். பிரதமர்-கிசான் சம்மான் நிதி, உஜ்வாலா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்கள் லட்சுமி தேவி வருகையின் அறிகுறிகள் ஆகும்” என்றார் ராஜ்நாத் சிங்.
இந்தியாவில் பாஜக மட்டுமே நல்லாட்சியை வழங்குவதாக சர்வதேச அமைப்புகள் கூறியிருப்பதாகவும், பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.