'என் சமூகத்தில் இருந்தே எனக்கு அழுத்தம் இருக்கிறது' – கேரளாவில் கல்லூரி மாணவர் தேர்தலில் வென்ற அய்ஷத்

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்க, அண்டை மாநிலமான கேரளாவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், கல்லூரி யூனியன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அய்ஷத் மசூனா. இவர் காசர்கோடு அரசுக் கல்லூரியில் பயில்கிறார். கல்லூரியில் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாணவர் அணியான எஸ்எஃப்ஐ சார்பில் அய்ஷத் போட்டியிட்டார்.

காசர்கோடு அரசுக் கல்லூரி யூனியன் தேர்தல் வரலாற்றில் வெற்றிப் பெற்ற மிகச் சில பெண்களில் அய்ஷத்தும் ஒருவர். இந்தக் கல்லூரியில் 1700 பேர் பயில்கின்றனர். இவர்களில் 500 பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெரும்பாலானோர் பெண்கள். இந்நிலையில், அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இத்தேர்தலில் வெற்றி பெறும் முதல் முஸ்லிம் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபி ஆதரவாளர், ஐயூஎம்எல்லின் எம்எஸ்எப் அமைப்பைச் சார்ந்தவர்களை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து அய்ஷத், “நான் எஸ்எஃப்ஐ சார்பில் போட்டியிட்டதால் முஸ்லிம் சமூகத்தில் இருந்தே எனக்கு எதிர்ப்பு இருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கம்யூனிஸ்ட்டுகள் கடவுள் மறுப்பாளர்கள் என்று கூறி என்னை எதிர்த்தனர். இருப்பினும் நான் வெற்றி பெற்றுள்ளேன். நான் இதுவரை கல்லூரி வளாகத்தைத் தாண்டி எஸ்எஃப்ஐ செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. அதனால் என் சமூகத்திலிருந்து எனக்கு மிகுந்த அழுத்தம் இருக்கிறது. இருப்பினும் எனது வெற்றி, முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில கெடுபிடிகளைக் கடந்து பெண்கள் தங்களின் அரசியல் பாதையை தேர்வு செய்யும் உரிமையை அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

கர்நாடகாவில் சர்ச்சையின் அடையாளமான ஹிஜாப் கேரளாவில் வெற்றியின் அடையாளமாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.