ஒன்றிய அரசிடம் கேரளா சிபாரிசு கவர்னரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்

திருவனந்தபுரம்: அரசியலமைப்பு சட்டத்தை மீறுதல், பல்கலைக்கழக வேந்தர் பதவி மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளில் தவறு செய்தால் கவர்னரை நீக்க சட்டசபைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையத்தை ஒன்றிய அரசு நியமித்தது. இந்த ஆணையம் ஆய்வு நடத்தி ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.  இந்த அறிக்கை தொடர்பாக பதில் அளிக்க மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து கேரள அரசு சார்பில் பதில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:  * அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னருக்கு பல முக்கிய பொறுப்புகள் இருப்பதால் அவருக்கு பல்கலைக்கழக வேந்தர் பதவி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கவர்னரை நியமிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.* கவர்னர் பதவியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதற்கு பொருத்தமான நபரை மட்டுமே நியமிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என்பது அந்தப் பதவிக்கு தடையாக இருக்கக்கூடாது.* அரசியலமைப்பு சட்டத்தை மீறினாலோ, பல்கலைக்கழக வேந்தர் பதவி மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளில் தவறு செய்தாலோ கவர்னரை நீக்க மாநில சட்டசபைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.* கவர்னருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்து முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனுமதிக்காக அரசு அனுப்பும் மசோதாக்கள் காலதாமதம் இல்லாமல் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க கேரளா தீர்மானித்துள்ளது. ஏற்கனவே கேரள கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சட்டீஸ்கரில் மோதல்தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் கவர்னர்கள், மாநில அரசின் நிர்வாகத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கின்றனர். அந்த வரிசையில் சட்டீஸ்கரிலும் மாநில காங்கிரஸ் அரசுக்கும் அம்மாநில கவர்னர் அனுசியா உய்கீக்கும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பேசிய கவர்னர் அனுசியா, ‘‘மாநிலத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே துணை வேந்தர் பதவியை தொடர்ந்து பெற்று வருகின்றனர். மற்ற பிற சமூகத்தினருக்கும் அந்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்த விஷயத்தில் கவர்னர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டுமென சட்டீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.