ரயிலை தொடர்ந்து பேருந்திலுமா இப்படி? பயணிகள் அதிர்ச்சி – வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியாவில் ரயில் பயணத்தின்போது, குடும்பத்தினர், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என குதூகலமாக பயணிகள் பயணிப்பர். அதேபோல், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும், செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பல சமயங்களில் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாகப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு பேருந்துகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து கேரள அரசு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் சத்தமாக பாட்டிசைக்கப்படுகிறது. பயணிகள் சத்தமாக செல்போனில் பேசுகின்றனர். இது மாதிரியான செயல்கள் சக பயணிகளுக்கு தொந்தரவாக அமைகிறது. எனவே பயணிகள் அனைவரும் இனிமையான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துத் துறையின் இந்த அறிவிப்புக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்கும் செயல் இது என கூறும் அவர்கள், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக, ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல் கோட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் இயர்போனில் மட்டும் பாட்டு கேட்டுக் கொள்ளலாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கேரள அரசு பேருந்துகளில் இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.