பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் பலி

சிம்லா,
இமாச்சலபிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தின் பதூ என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அந்த பட்டாசு ஆலையில் 15-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆலையில் தொழிலாளார்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக்குழுவினர், போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.