இந்தியாவில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா: பிஎம் கேர்ஸ் பிப்.28 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 12.6% அதிகம். அன்றாட பரவல் 1.28 சதவீதம் என்றளவில் உள்ளது. (100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதின் கணக்கு). 49 நாட்களுக்குப் பின்னர் நேற்று கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை முதன் முறையாக ஒரு லட்சத்துக்கும் கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,28,67,031.
* கடந்த 24 மணி நேரத்தில் 31,377 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை:4,21,89,887
* கடந்த 24 மணி நேரத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,12,622.
* இதுவரை நாடு முழுவதும் 175.46 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

பிஎம் கேர்ஸ் பிப்.28 வரை நீட்டிப்பு: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் (PM CARES scheme for children orphaned due to COVID-19 pandemic )பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இது டிசம்பர் 31 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பல குழந்தைகள் பயனடைவார்கள்.

கரோனா காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, பெற்றோர்களை இழந்த அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுகிறார்கள். சுகாதாரக் காப்பீட்டின் மூலம் நல்வாழ்வையும், கல்வியின் மூலம் அதிகாரமளித்தலையும் 23 வயது அடையும்போது நிதியுதவி செய்வதன் மூலம் தற்சார்புக்கு அவர்களைத் தயார் செய்வதையும் இந்தத் திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.

ஒமைக்ரான் BA.2 திரிபால் ஆபத்தில்லை: ஒமைக்ரான் BA.2 திரிபு காரணமாக ஆபத்தில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூத்த அதிகாரியான மரியா வான் கெர்கோவ் இது குறித்து, “ஒமைக்ரான் ஒரிஜினல் வைரஸ் BA.1 மற்றும் அதன் திரிபு BA.2 என இரண்டுமே உலகில் பரவலாக தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இதில் BA.2 திரிபு காரணமாக ஆபத்தில்லை. ஒரிஜினல் திரிபு போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.