கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி



2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

2022இல் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, தற்போது 432,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவேற்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

வரும் ஆண்டுகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான புலம்பெயர்வோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது.

2022இல்: 431,645 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம்

2023இல்: 447,055 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம்

2024இல்: 451,000 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம்

புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser இது தொடர்பாக அளித்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த திட்டம், நம் நாட்டில் பணியாளர்கள் தேவைக்கும் வேலை தேடும் சர்வதேச பணியாளர்களுக்கும் சம நிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும் என்றார்.

இந்த திட்டம், கனடாவின் பொருளாதாரத்துக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்ய இருக்கும் திறன்மிகு பணியாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கில் செயல்படுகிறது.

பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் அதே நேரத்தில், குடும்பங்களை ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும், உலகில் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்போருக்கு அகதிகள் மறுகுடியமர்வு மூலம் உதவுவதற்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நமது நோக்கம், நம் நாட்டில் எங்கெல்லாம் உண்மையாகவே பொருளாதாரத்தில், பணியாளர்கள் மற்றும் மக்கள் தொகையில் பற்றாக்குறை உள்ளதோ, அங்கெல்லாம் புதிதாக வருவோரை தங்கச் செய்து பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்வதாகும் என்றார் அவர்.

கனடா இதுவரை சாதித்துள்ளதைக் குறித்து நான் பெருமையடைகிறேன் என்று கூறும் Sean Fraser, புதிதாக வருவோர், தொடர்ந்து, வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் உகந்த நாடாக கனடாவைத் தேர்ந்தெடுப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.