ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு ரத்து – ஆன்டனி பிளிங்கன் அறிவிப்பு

வாஷிங்டன்:
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக கூறிய ரஷ்யா, தனது படைகளை தொடர்ந்து எல்லையில் நிலைநிறுத்தியது. உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்தது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், ஜெனீவாவில் ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.