‘வெற்று பேச்சுகளால் ரஷ்யா எங்களை ஏமாற்ற முடியாது’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: கிழக்கு உக்ரைனின் இரு மாகாணங்களையும் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ரஷ்ய நடவடிக்கையால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. 

மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்க அமெரிக்கா உத்தரவிடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று அறிவித்தார்.

‘திருந்தாவிட்டால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்’

உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளது என்று ஜோ பைடன் கூறினார். மேலும் உக்ரைன் தொடர்பான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கூற்றுக்களால் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஏமாறாது என்றார் அவர். புடின் மேலும் நடவடிக்கை எடுத்தால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அதிபர் பைடன் தெளிவுபடுத்தினார்.

நிதி உதவி தடை செய்யப்படும்

‘ரஷ்யாவின் இரண்டு பெரிய நிதி நிறுவனங்களான விஇபி மற்றும் மிலிட்டரி வங்கி மீது நாங்கள் தடைகளை அமல்படுத்துகிறோம். இது தவிர மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு வழங்கப்படும் நிதி உதவியும் நிறுத்தப்படும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பீடு செய்து வருகிறோம்’ என்று அமெரிக்க அதிபர் கூறினார். ரஷ்யா தனது கோமாளித்தனத்தை கைவிடவில்லை என்றால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும் படிக்க | உக்ரைனின் டோனெட்ஸ்க் – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா 

அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்புகிறது

கிழக்கில் ரஷ்யா-வின் இருப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நேட்டோ பால்டிக் நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்புகிறது என்று பைடன் தெரிவித்தார். உக்ரைனுடனான போர் போன்ற சூழ்நிலையின் மத்தியில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்யா போருக்கு சாக்குப்போக்கைத் தேடுகிறது

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அனைத்து இடங்களிலும் விமர்சிக்கப்படுகிறது. இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் எனவும் பிரிட்டன் கூறியுள்ளது. 

இதேபோல், எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸும் ரஷ்ய நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளார். இது உக்ரைனின் ஒருமைப்பாட்டை மீறுவதாக உள்ளதாக அவர் கூறினார். நாடுகளுடன் தூதாண்மை உறவுகளுக்கான வழிகளை அடைத்துவிட்டு போருக்கான சாக்குகளை ரஷ்யா தேடுகிறது என்று எஸ்டோனியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.