''எடப்பாடிக்கு ஆன்ம பலம் இருக்குமானால்…'' – நாஞ்சில் சம்பத் சவால்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில், தி.மு.க – அ.தி.மு.க இடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதம், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட சூழலிலும்கூட தகித்துக்கிடக்கிறது.

இதையடுத்து தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க தொடுத்த கேள்வி – விமர்சனங்களுக்குப் பதில் விளக்கம் கேட்டு தி.மு.க ஆதரவுப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்…

”தி.மு.க-வின் எட்டு மாத ஆட்சியில், புதிதாக எந்தத் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?”

”என்ன சாதித்தார் என்று கேட்கின்ற எடப்பாடிக்கு நான் சொல்வது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை அறிவித்ததே மிகப்பெரிய சாதனை. ஏனெனில், ‘மாநகராட்சி – நகராட்சித் தேர்தல்களை நடத்தினால் தோற்றுப்போய்விடுவோம்’ என்று கருதி உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாழ்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதிகாரத்தில் இருக்கிற காலகட்டத்தில், எட்டுத் திங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிட்டு, ஜனநாயகத்தின் நாற்றங்கால்களாக இருக்கின்ற உள்ளாட்சிக்கு உரிய மரியாதையைத் தந்தவர் மு.க.ஸ்டாலின். இதைவிட பெரிய சாதனை என்ன வேண்டும் எடப்பாடிக்கு?”

ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

”நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தானே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது?”

”நீதிமன்ற உத்தரவெல்லாம் கிடையாது. எடப்பாடி முதல்வராக இருந்தபோதும்தான் நீதிமன்ற உத்தரவு இருந்தது. ஆனால், அவர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லையே!”

”கொரோனா ஒழிப்பு பணி, நீட் தேர்வு விலக்கு தீர்மானம், பொங்கல் பரிசுத் தொகுப்பு என தி.மு.க அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துவருகின்றனவே?”

”நீட் தேர்வை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர் ஸ்டாலின்.

கொரோனா பெருந்தொற்று கொத்துக்கொத்தாக தமிழர்களின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் தி.மு.க அரசு பதவியேற்றது. ஆனால், பொறுப்பேற்ற பிறகு கொரோனாவை ஒழிப்பதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் நிற்கிறது தமிழ்நாடு.

அது மட்டுமல்ல…. இந்தக் கொரோனா பெருந்தொற்று சூழலிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத்தை முந்திக்கொண்டு முதலிடத்தில் நிற்கிறது தமிழ்நாடு.

முதல்வர் ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்து இந்த எட்டுத் திங்களுக்குள் இதுவரை 41 ஆயிரம் பேர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் வழியே ஆறாயிரம் பேரை அரசு வேலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பத்தாயிரம் பேரை காவலர் பணிக்குத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்படி அரசின் அனைத்துத் துறைகளிலும் வேலைகள் மளமளவென நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவரம் எல்லாம் எடப்பாடிக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டு மக்களின் சுபிட்சத்திற்காக வீடு தோறும் நான்காயிரம் ரூபாய் கொடுத்தார் முதல்வர். ஆறு மாதங்களுக்கு முன்பே 14 மளிகைப் பொருட்களையும் கொடுத்தார். பொங்கலுக்கும் கரும்போடு சேர்த்து 21 பொருட்களைக் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதும் அல்ல. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ‘கரும்பு இனிக்கவில்லை’ என்கிறார். ஓர் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியா பேசுவார்? ஆக, எதைப் பேசவேண்டும் என்ற தெளிவோ, எதை விவாதிக்க வேண்டும் என்ற அறிவோ எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லை.

பத்தாண்டு காலமாக பள்ளத்தில் விழுந்துகிடந்த தமிழகத்தை, இப்போது தெளிவான பாதையில் பயணிக்கவைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் தமிழ்நாட்டைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.”

”நீட் தேர்வு குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா என்ற முதல்வரின் சவாலுக்கு ‘தயார்’ என பதில் சவால் விட்டுள்ளாரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி?”

”முதல் அமைச்சரை ஒரே மேடையில் விவாதிக்க சவால் விடுகிற எடப்பாடிக்கு ஆண்மையும் ஆன்ம பலமும் இருக்குமானால், இந்த விவகாரத்தை சட்ட மன்றத்திலேயே அவர் எதிர்கொண்டிருக்க வேண்டும். அதாவது, ‘நீட் தேர்வு பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில் கேட்கத் துணிச்சல் இல்லாத எடப்பாடி, அ.தி.மு.க தொண்டனைக் குழப்புவதற்காக இப்போது ஸ்டாலினை சவாலுக்கு அழைக்கிறார்.”

தமிழகத்தின் அமைதியைக் கெடுப்பதற்கும் தமிழகத்தை அமளிக்காடாக்குவதற்கும் திட்டமிட்ட கலவரத்தை உருவாக்குவதற்கும் காவிக்கும்பல்களோடு சேர்ந்துகொண்டு தமிழகத்தின் நிறத்தை மாற்றுவதற்குத் திட்டமிடுகிறார்கள். அவர்களுடைய அடுத்த வேலைத்திட்டம் இதுதான். அதற்காகத்தான் இப்படியெல்லாம் பேசிவருகிறார்கள்.”

எடப்பாடி பழனிசாமி

”முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க-வுடன் தி.மு.க கூட்டணியை ஒப்பிட்டு மிகக் கடுமையாக விமர்சித்திருந்தாரே?”

”மதச்சார்பற்ற அணி என்ற வலுவான கட்டமைப்புக்குள் தி.மு.க-வோடு காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி என அனைவரும் ஒன்றாகக் கரம் கோர்த்து உறுதியோடு நிற்கிறோம். ஆக, பா.ஜ.க-வுக்கு எதிராக வலிமையானதொரு கூட்டணி இயக்கத்தை இயக்குகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க., அஸ்தமனத்தை நோக்கி – அதலபாதாளத்தை நோக்கிப் பயணிக்கிறது.

தி.மு.க-வின் தேவை தமிழகத்தைத் தாண்டி இந்தியாவுக்கும் தேவைப்படுகிற கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். காந்தியின் இந்தியாவை கோட்ஸேவின் இந்தியாவாக மாற்றுவதற்கு, எடுக்கின்ற பாசிஸ நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒருக்காலும் செவி சாய்க்காது என்பதைவிட, அதை எந்தக் காலத்திலும் எதிர்த்து நிற்கிற அணிவகுப்புக்கு எப்போதும் தலைமை தாங்கும்!”

”இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை இயக்குகிறவர் ஸ்டாலின் என்றால், காங்கிரஸ்?”

”தமிழ்நாடு அளவில், இப்போது தலைமை தாங்கி வழிநடத்தி வருபவர் மு.க.ஸ்டாலின். அகில இந்திய அளவிலும் தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய நாளும் விரைவில் வரும். அதற்கான முதல்கட்டமாக நாடு முழுக்க உள்ள 37 தலைவர்களையும் சமூக நீதிக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்காக கடிதம் எழுதியிருக்கிறார். பா.ஜ.க அல்லாத முதல்வர்கள் கூட்டத்தை டெல்லியிலே நடத்துவதற்காகத் திட்டமிட்டு வருகிறார். ஆக, தேசிய அளவில் ஸ்டாலின் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறார்.”

ஸ்டாலின் – மம்தா பானர்ஜி

”தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை கட்டமைப்பதில், காங்கிரஸ் – மம்தா பானர்ஜியோடு மு.க.ஸ்டாலினும் போட்டி போடப்போகிறாரா?”

”அப்படியெல்லாம் கிடையாது. மதம், வகுப்புவாதம் என்று வெறுப்பரசியல் செய்துவருகிற பா.ஜ.க எனும் அழிவு சக்தியை இந்தியாவிலிருந்தே அப்புறப்படுத்த வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது என்ற உண்மையை நாங்கள் எல்லோருமே உணர்ந்துள்ளோம். எனவே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் என்று எங்களைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. யுத்த காலம் நெருங்கிவரும்போது, எல்லா தலைவர்களுமே ஒன்று சேர்ந்து சரியான முடிவை எடுப்பார்கள்.”

”ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர் தி.மு.க-வினர். இதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று சீமான் சொல்கிறாரே?”

”ஆதாரத்தை சொல்ல வேண்டியதுதானே! சீமான் ஒரு ஆண் மகனாக இருந்தால், ஆதாரத்தை சொல்லவேண்டும்!”

” ‘ஆளுநர் ஆர்.என்.ரவியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று நீங்கள் பேசி வருகையில், ‘தமிழக ஆளுநர், பிரதமரை வம்புக்கு இழுத்தால் வட்டியும் முதலுமாக தி.மு.க-விற்கு திருப்பி தரப்படும்’ என அண்ணாமலை எச்சரித்துள்ளாரே?”

”அறிவார்ந்த தளத்திலிருந்து எந்தவித விவாதத்தையும் செய்வதற்கு அண்ணாமலை தயாரில்லை. நாங்கள் மோடியிடத்திலோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திடமோ நாங்கள் மோதுதல் நடத்தவில்லை. தமிழக சட்டமன்றத்தினுடைய இறையாண்மையை, பாதுகாக்கப் போராடி வருகிறோம். தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறோம்.

சீமான்

தமிழ்நாடு அரசு எடுக்கின்ற எல்லா முடிவுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்படி ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கின்ற ஒன்றை தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானமாக நிறைவேற்றித் தந்ததற்குப் பிறகு அதைத் திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே இல்லை. ஆக, தன்னுடைய அதிகார வரம்பையே தெரியாத ஒருவர் இந்த நாட்டின் ஆளுநராக இருக்கிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மை. ஆனால், இது அண்ணாமலைக்குத் தெரியவில்லை. அதனால் சட்டப்படி, நியாயப்படி தி.மு.க அரசு தன்னுடைய கடமையைச் செய்துவருகிறது.

எனவே, நீட் தேர்வு விலக்குத் தீர்மானத்தை மறுபடியும் ஆளுநருக்கே திருப்பியனுப்புவதென்பது தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய இறையாண்மை. இந்தத் தீர்மானத்தை மறுபடியும் ஆளுநர் திருப்பியனுப்பினால், ‘ஆளுநர் பதவி தேவைதானா…., இந்த ஆளுநர் இங்கே தேவைதானா’ என்று அடுத்தடுத்தக் கேள்விகள் வரும். எல்லாவற்றையும்விட மக்கள் மன்றம் பெரிது. இதைத்தான் நானும் என் பேச்சில் சுட்டிக்காட்டியிருந்தேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.