போரை உடனே நிறுத்துங்கள்… ரஷிய அதிபர் புதினிடம் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. 
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும், ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பாலிகா தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.