உ.பி. தேர்தலில் பாஜகவை மிரட்டும் கைவிடப்பட்ட பசுக்கள்: பிரச்சினையை சமாளிக்க பிரதமர், முதல்வர் புதிய அறிவிப்புகள்

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 7 கட்ட தேர்தலில் 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பசுக்கள் விவகாரம் கிளம்பியுள்ளது.

பசுவை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பசுப் பாதுகாப்பை பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்தியில் பாஜக ஆட்சி 2014-ல் அமைந்தது முதல் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் கொலைகளும் நிகழ்ந்தன. அதேசமயம், கைவிடப்படும் பசுக் களும் பிற மாடுகளும் தங்கள் பயிர்களை மேய்ந்து இழப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே புகார்களும் கிளம்பின.

உ.பி.யில் ஆளும் பாஜக அரசு, இப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியது. இதனால் விவசாயிகள் அந்த மாடுகளை பிடித்து பள்ளி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் அடைத்தனர். மாடுகள் முட்டி உயிர்கள் பலியா கும் செய்திகளும் ஆங்காங்கே வெளியாகின. இதனால் முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 4-ம் கட்ட வாக்குப் பதிவை, பாந்தா மாவட்டத்தின் தஸத் பூர்வா கிராம மக்கள், பசுக்கள் பிரச்சினையை முன்வைத்து புறக்கணித்தனர். எஞ்சிய 3 கட்ட தேர்தல்நடைபெறும் உ.பி.யின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கைவிடப்பட்ட பசுக்கள் அதிகம் உள்ளன. இவற்றால் ஏற்படும் பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஆயுதமாக்கி பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

இவர்களை சமாளிக்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தில் பேசும்போது, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் உ.பி.யில் பசுக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பசுக்களின் சாணத்தை விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் எங்கள் அரசு மாற்றும்” என்றார்.

அமேதியில் முதல்வர் ஆதித்யநாத் கூறும்போது, “விவசாயிகளின் பயிர்களை பசுக்கள் சேதப்படுத்துவதை தடுக்க, மார்ச் 10-ல்புதிய ஆட்சி அமைந்த பிறகு மிகப்பெரிய அளவில் பசுப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும். இவற்றில் கை விடப்பட்ட பசுக்களை பராமரிக்க விவசாயிகளுக்கு ரூ.900 முதல் ரூ.1,000 வரை அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.

கடந்த 2017-ல் உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் ஆதித்யநாத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன. இதை யடுத்து பசுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்தது. உ.பி.யில் கைவிடப்பட்ட பசுக்கள் தற்போது சுமார் 16 லட்சம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உ.பி.யின் 5,617 பசுப் பாதுகாப்பு மையங்களில் 8 லட்சம் பசுக்கள் இருப்பதாகத் தெரிகிறது.

பசுக்களை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டத்தையும் முதல்வர் ஆதித்யநாத், அறிமுகப் படுத்தினார். இதன் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்துடன் நின்று விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பசுக்கள் பாதுகாப்புக்காக அரசு ரூ.355 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.