புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது டெல்லி அணி

பெங்களூரு:
எட்டாவது புரோ கபடி லீக் பெங்களூருவில் நடைபெற்றறது. அரை இறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் உ.பி. யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின. 
பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன. 
வெற்றிக் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், டெல்லி-பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி, மாறி மாறி புள்ளிகளை பெற்றதால் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதாவது 37-36 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடைசி நேரத்தில் செய்த தவறால் பாட்னா அணி கோப்பையை இழக்க நேரிட்டது. 
இந்த சீசனில் 24 போட்டிகளில் 304 ரெய்டு பாயிண்டுகள் பெற்ற பவன் ஷெராவத், சிறந்த ரெய்டராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 24 போட்டிகளில் 89 புள்ளிகளைப் பெற்ற முகமதுரேசா ஷாத்லூயி, சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் புதிய இளம் வீரராக மோகித் கோயத்தும், இந்த சீசனில் மிகவும் மதிப்பு மிக்க வீராக நவீன் குமாரும் (17 போட்டிகளில் 207 ரெயிடு பாயிண்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.