இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி; இந்தியா வெற்றி பெற 184 ரன்கள் இலக்கு!

தரம்சாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். அணியின் ஸ்கோர் 67ஆக இருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் குணதிலகா(38 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த, அசலங்கா 2 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து கமில் மிஷாரா(1 ரன்) மற்றும் சண்டிமால்(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர்.
இப்படி இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி  47 ரன்கள் (19 பந்துகள், 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு பக்கபலமாக நின்ற தொடக்கவீரர் நிசங்கா 75 ரன்கள்(53 பந்துகள், 11 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். 
இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அதன்படி, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.