தெலங்கானாவில் பயிற்சி விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது : தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உடல் கருகி பலி

ஹைதராபாத் : தெலங்கானாவில் பயிற்சி விமானம் ஒன்று திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில்  தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த போது தெலங்கானாவின் நல்கொண்டா பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். வயல்வெளியில் திடீரென கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து விமானம் தீப்பிடித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து சென்று விமானத்தில் இருந்தவர்களை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் கரும்புகையுடன் விமானம் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் சிக்கிய இருவரது உடலையும் மீட்டு ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது பயிற்சி விமானி மகிமா என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் சென்ற விமானி ஒருவரும் உயிரிழந்தார். உயிர் அழுத்த மின் கம்பிகளில் மோதி கீழே விழுந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற பயிற்சி விமான விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.