அமெரிக்க அதிபர் தேர்தல் முறையாக நடந்திருந்தால் உக்ரைன் பிரச்னை பூதாகரமாகி இருக்காது: டிரம்ப்| Dinamalar

புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் முறையாக நடந்திருந்தால் உக்ரைன் பிரச்னை பூதாகரமாகி இருக்காது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்ய மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 350 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒர்லாண்டோ மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சி கூட்டத்தில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை குற்றம் சாட்டினார். ஜோ பைடனின் நடவடிக்கை குறித்து விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், அமெரிக்க நாட்டில் உள்ள தலைவர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். விளாடிமிர் புடின் தந்திரமாக உக்ரைனை ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ள நிலையில் இந்த போருக்கு நேட்டோ ஒரு முக்கிய காரணி. கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்று இருந்தால் தற்போது இந்தப் பிரச்னை இவ்வளவு பூதாகரமாகி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.