`இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டுட்டு வரக்கூடாது' – புதுச்சேரி போலீஸார் பேச்சால் புது சர்ச்சை!

சுற்றுலாத்தலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். அதேபோல பிரெஞ்சுக் கட்டடக் கலையுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கட்டடங்கள், தேவாலயங்கள், ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில், அரவிந்த ஆசிரமம் உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருகிறார்கள். அப்படி வரும்போது புதுச்சேரியின் தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பார்கள்.

இந்த நிலையில், நேற்று மாலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலீஸார் பேசும் வீடியோ ஒன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் அதில், “இந்த மாதிரி உடைகளை அணிந்துவரக் கூடாது” என்று கூறும் இரண்டு போலீஸாரிடம், “எங்கள் உடைகுறித்து உங்களிடம் யார் புகார் கொடுத்தது?” என்று கேட்கிறார்கள் அந்த பெண்கள். அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலீஸார் திணறுவபோல முடிவடைகிறது அந்த வீடியோ.

அந்த வீடியோவில் இருக்கும் பெரியக்கடை காவல் நிலைய காவலர் திருமுருகேசனை தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து கேட்டோம். “நேற்று அந்தப்பக்கம் ரோந்துப் பணியில் இருந்தபோது ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பெண்களை பார்த்து ஆங்கிலத்திலேயே கத்திக் கொண்டிருந்தார். பிறகு எங்களிடம் வந்து, `பள்ளிக்கூடமெல்லாம் இருக்கும் இடத்தில் இப்படியெல்லாம் டிரெஸ் போட்டுட்டு வர்றாங்க’ என்று சொன்னார். அந்த பெண்கள் அணிந்திருந்த டிரெஸ் முகம் சுளிக்கும்படியாக இருந்தது. அதனால் அவர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்” என்றார்.

அதைத் தொடர்ட்ந்து அவரிடம், `புதுச்சேரிக்கு வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் அணிந்துவரும் ஆடைகளை கட்டுப்படுத்த காவல்துறை தலைமை உங்களுக்கு ஏதேனும் உத்தரவிட்டிருக்கிறதா?’ என்று கேட்டோம். அதற்கு, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றார்.

காயத்ரி ஸ்ரீகாந்த் –

இந்தச் சம்பவம் குறித்து இறைவி பெண்கள் பாதுகாப்புக் குழுவின் தலைவி காயத்ரி ஸ்ரீகாந்திடம் பேசினோம். “இந்த கலாசார காவலர்களுக்கு என்னதான் பிரச்னையோ தெரியவில்லை. ஹிஜாப், ஸ்லீவ்லெஸ், புடவை, ஜீன்ஸ், நைட்டி, லெக்கின்ஸ் என பெண்கள் எதை அணிந்தாலும் இவர்களுக்கு குற்றம்தான். துப்பட்டா போடவில்லை என்றாலும் குற்றம்தான். எதற்கெடுத்தாலும் பெண்களின் ஆடைகளை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் அலமாரியில் இவர்களுக்கு என்ன வேலை என்ற பெரியாரின் கேள்வியை திரும்ப திரும்ப இவர்களிடம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் திடீரென பெண்களுக்கு ஆடை கட்டுபாடு எழுவது ஏன்? தான் விரும்பும் ஆடையை அணிய எந்தப் பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.

“யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. முறையற்ற நிர்வாகங்களால் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் படுத்துவிட்டதால் மத்திய அரசின் நிதி மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருக்கிறது புதுச்சேரி. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையே இப்படியான அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டால் மாநிலத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.