இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி, காயம் காரணமாக இஷான் கிஷன் விலகல்

தர்மசாலா
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற மைதானமான தரம்சாலாவிலேயே நடைபெறுகிறது. இந்த போட்டியானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. 

நேற்று நடைபெற்ற  போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. உடனடியாக அவருக்கு களத்தில் இந்திய மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர்.இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிசிசிஐ மருத்துவக் குழு இஷானை உன்னிப்பாகக் கண்காணிக்கும். இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றியை சுவைத்துள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடந்து அதிக வெற்றிகளை குவித்த அணிகளான ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய நாடுகளின் சாதனையை (தொடர்ச்சியாக தலா 12 வெற்றி) இந்தியா சமன் செய்யும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.