உக்ரைன் போரை மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவை சீனா தாக்க திட்டம்?| Dinamalar

பெய்ஜிங்: ரஷ்ய-உக்ரைன் போரை முன்மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவைத் தாக்க சீனா திட்டமிடுவதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.

சீனா தொடர்ந்து பல ஆண்டு காலமாக தனது அண்டை நாடான தைவானை தன்வசம் ஆக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறிய தீவு நாடான தைவானில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதன் பிரதமர் சாய் இங் வென் பல ஆண்டுகாலமாக தைவானை சுற்றி அச்சுறுத்தல் ஈடுபடும் சீன கடற்படை மற்றும் விமானப் படைக்கு தங்கள் படை மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

தொழில்நுட்ப உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் தைவான் சீனாவின் இரும்பு காரத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் உதவியை நாடி வருகிறது.

அமெரிக்காவுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள தைவான், சீனாவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றான சீன ராணுவம், தைவான்மீது ஏவுகணை தாக்குதல் நடத்த அதிக நேரம் ஆகாது.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு தனது 5 அம்சங்கள் கொண்ட தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங், தைவான் ஆகிய இரு நாடுகளையும் கைப்பற்ற சீனா தீவிர முயற்சி மேற்கொண்டது.

ஆனால் சீனாவின் எந்த முயற்சியும் இதுவரை பலிக்கவில்லை. இந்நிலையில் சீனாவின் நட்பு நாடான ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ளது. கடந்த 4 நாட்களாக உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடும் போர் நீடித்து வருகிறது.

சிறிய நாடான உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து தன்னை தற்காத்துக்கொள்ள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டு ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில் சீனா உக்ரைன்-ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னதாக கருத்து தெரிவித்த தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ, தற்போது உலக நாட்டு அதிபர்களின் கவனம் உக்ரைன்மீது உள்ள நிலையில் யாரும் எதிர்பாரா வகையில் சீன ஜி ஜின் பிங் அரசு தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒருவேளை ரஷ்யா உக்ரைனை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கைப்பற்றிவிட்டால் அடுத்து சீனா தைவான் மீது ரஷ்யா போல ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆயுதமேந்தி படையெடுத்து வந்தபோது அஷ்ரப் கனி அரசு பின்வாங்கியது போன்று உக்ரைனில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அரசு பின்வாங்கவில்லை. தொடர்ந்து தங்கள் உரிமைக்காக போராடி வருகிறது.

தைவான் பிரதமர் சாய் இங் வென், ஜெலன்ஸ்கி போலவே நெஞ்சுரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சீனா, தைவான் மீது படையெடுத்து வந்தாலும் தன்னால் இயன்றவரை போராடிய தீருவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சீனாவின் ராணுவம் தைவானை கட்டுக்குள் கொண்டுவர அதிக நேரம் பிடிக்காது. ஒருவேளை தைவானை சீனா இவ்வாறு சர்வாதிகாரம் மூலம் ஆக்கிரமித்தால் அது மறைமுகமாக இந்தியாவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

latest tamil news

ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதிகளில் சீனா இந்திய எல்லை படையுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. போர் மூலமாக ஒரு நாட்டை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை சீன கம்யூனிச அரசை பெற்றுவிட்டால் இதையடுத்து சீனாவின் அடுத்த இலக்கு ஹாங்காங் மற்றும் இந்தியாவாகத் தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

சீனாவின் இந்த சர்வாதிகார முயற்சி பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் வரவேற்கப்படும். ஆனால் ஒருவேளை உக்ரைன் தனது போரில் வென்று ரஷ்யாவின் இரும்பு பிடியிலிருந்து மீண்டால் சீனா, தைவான் மீது படை எடுக்கும் தனது திட்டத்தை கைவிடவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.