உக்ரைன் மக்களுக்காக திறந்திருக்கும் அண்டை நாட்டு எல்லைகள்… சண்டையிட தயாராகும் ஆண்கள்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள், பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உ18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடை விதித்துள்ளதால், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 120,000 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மக்கள் எவ்வித அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்றி வரலாம் என போலாந்து தனது எல்லையை திறந்து வைத்துள்ளது.

மோஸ்டிஸ்காவில் போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வார்சாவுக்கு கொண்டு வருவதற்காக, மருத்துவமனை ரயிலை அந்நாடு அனுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், ரஷ்யப் படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்காக சில உக்ரைனியர்கள் போலந்தில் இருந்து மீண்டும் உக்ரைனுக்குத் செல்வதாக கூறினார். காயமடைந்தவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறலாம் என்கிற விதிவிலக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையரின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மாண்டூ கூறுகையில், “தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 116,000 பேர் சர்வதேச எல்லைகளைக் கடந்துள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், எண்ணிக்கை அதிகரிக்கிறது. நிலைமை மேலும் மோசமடைந்தால் 4 மில்லியன் உக்ரைனியர்கள் வெளியேறலாம் என எதிர்ப்பார்ப்பதாக” தெரிவித்தார்.

எல்லையை கடந்த பெண்களும், முதியவர்களுக்கு தங்களது குடும்ப ஆண்கள் ரயிலில் இருந்து போருக்காக இழுத்து செல்லப்பட்டதை விவரித்து கண்ணீர் விட்டனர்.

கிவ்வை சேர்ந்த பெண் கூறுகையில், ஒரு ஆண் தனது குழந்தையுடன் பயணித்தாலும், எல்லையை கடக்க அனுமதியில்லை என்றார். ரயிலில் வந்த மற்றொரு பெண் எர்செபெட் கோவாக்ஸ்(50) கூறுகையில், ஆண்கள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை” என்றார்.

இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ” நாங்கள் நல்லவர்கள் தான். முரட்டுத்தனமான குணம் கொண்டவர்கள் கிடையாது. இருப்பினும், நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை ஆண்களுக்கு இருக்கிறது” என்றார்.

பல நாட்டு எல்லைகளில் கார்கள் பல கிலோமீட்டருக்கு வரிசையாக நிற்கின்றன. போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் மால்டோவாவில் உள்ள அதிகாரிகள், தங்குமிடம், உணவு மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நாடுகள் தங்கள் வழக்கமான எல்லை நடைமுறைகளையும் எளிதாக்கியுள்ளன.

போலந்து எல்லைக்கு நடந்தும், கார் மற்றும் ரயில் வழியாகவும் உக்ரைனியர்கள் வந்தனர். சிலர், தங்களது செல்லப்பிராணிகளையும் அழைத்து வந்தனர். அனைவரையும் வரவேற்ற போலந்து அதிகாரிகள், அங்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினர். சிலர் ஏற்கனவே போலந்து மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியேறிய உறவினர்களுடன் சேர விரும்பினர்.

ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் கூறுகையில், இப்படியோரு நாள் வரக்கூடாது என தீவிர முயற்சி செய்தோம். இருப்பினும், ரஷ்ய அதிபர் போரை தேர்ந்தெடுத்துவிட்டார். எனவே, உக்ரைனை விட்டு வெளியேறும் அனைத்து மக்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உக்ரைனில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.

ஹங்கேரி நாடு, போர் காரணமாக உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமின்றி சட்டப்பூர்வமாக அங்கு வசிக்கும் அனைத்து மூன்றாம் நாட்டு பிரஜைகளுக்கும் பாதுகாப்பிற்கு உரிமை இருப்பதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்காக, அந்நாட்டு ராணுவ உதவியை கோரியுள்ளது.

போலந்தும் ஹங்கேரியும் தற்போது உக்ரேனியர்களிடம் காட்டும் வரவேற்பு, சமீபத்திய ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது கொண்டிருந்த விரும்பத்தகாத நிலைப்பாட்டிலிருந்து மிகவும் வித்தியாசமானது.

2015 இல் போரிலிருந்து தப்பிய சிரிய மக்கள் ஐரோப்பாவிற்கு வந்தபோது, அவர்களைத் தடுக்க ஹங்கேரி ஒரு தடுப்பு சுவரைக் கட்டியது.

அதேபோல், ஆயிரக்கணக்கான மத்திய கிழக்கு புலம்பெயர்ந்தோர் பெலாரஸில் நுழைய முயன்றபோது, தடுப்பு சுவரை போலந்து கட்டியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.