உக்ரைன் – ரஷ்யா போர்: இந்தியர்களுடன் புறப்பட்டது 3ஆவது விமானம்!

உக்ரைன்
மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை குறி வைத்து பல்முனைத் தாக்குதலை வீரர்கள் நடத்தி வருகின்றனர். முன்னதாக, போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரைனில் சிக்கியிருந்த தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்தன.

அதன்படி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சுமார் 240
இந்தியர்கள்
மீட்கப்பட்ட நிலையில், போர் தொடங்கியதால் அடுத்த இரண்டு விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தமிழர்கள் 5000 பேர் உள்பட உக்ரைனில் வசித்து வந்த 20,000 இந்தியர்களின் நிலை கேள்விக் குறியானது.

இதனிடையே, உக்ரைனின் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அண்டை நாட்டு எல்லைகளுக்கு வரச்செய்து அங்கிருந்து விமானம் மூலம் மீட்டு வர முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, ருமேனியா, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து
ஏர் இந்தியா
விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் 240 பேருடன் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் இருந்து ஏர் இந்தியாவின் மூன்றாவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. முன்னதாக, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்கள் 210 பேருடன் முதல் விமானமும், 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானமும் டெல்லி வந்தடைந்துள்ளது. இந்த விமானங்களில் பெரும்பாலும் மாணவ-மாணவிகளே உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.