திண்டுக்கல் சேவல் கண்காட்சியில் வலம் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்  

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சியில் மூன்று லட்சம் மதிப்பிலான சேவல் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன.

திண்டுக்கல்லில் உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

இதில், கருங்கீரி, மயில்சேவல், கொக்கு வெள்ளை, என்னைக்கருப்பு, காகம், மஞ்சள்பொன்ரம், செவலை உள்ளிட்ட பல்வேறு வகையான சேவல்கள் பங்கேற்றன. இதில், பங்குபெற்ற கிளிமூக்கு, விசிறிவால் வகையைச் சேர்ந்த சேவல்கள், அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் மதிப்பு கொண்டவை. இந்த கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள் அதன் கொண்டை, மூக்கு தோற்றத்தை பொறுத்தும், வாலின் நீளம் ஆகியவற்றை கணக்கிட்டும் லட்சக்கணக்கில் விலை போகின்றன.

திண்டுக்கல்லில் நடந்த கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் பங்கேற்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்

இதுகுறித்து கண்காட்சி நடத்தியவர்கள் கூறுகையில், கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள் சண்டை சேவல்கள் அல்ல. நம் பாரம்பரிய நாட்டு ரகத்தை காக்கும் வகையில் இந்த சேவல் கண்காட்சியை நடத்தி வருகிறோம். இங்கு சேவல் கொண்டுவந்திருக்கும் ஒவ்வொருவரும் சேவல்களை தங்கள் குழந்தைகளை போல் பாதுகாத்து வளர்த்துவரும் சேவல் பிரியர்கள். சிறந்த சேவல்களை தேர்ந்தெடுத்து 25 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகிறோம். இரண்டாம் பரிசாக 25 பேருக்கு 25 மிக்சி வழங்குகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக சேவல் கண்காட்சி நடைபெறாதநிலையில் இந்த ஆண்டு நடைபெற்றதால் பல பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் சேவல் வளர்ப்பாளர்கள், பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர், என்றனர்.

இந்த சேவல் கண்காட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் நெல்சல் தலைமை வகித்தார். தலைவர் ஜெயக்குமார், செயலாளர் உஷ்மான், துணைசெயலாளர் பிரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.