இரட்டை மடிப்பு வலை விவகாரம் ஆறு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இரட்டை மடிப்பு வலை பயன்படுத்தும் விவகாரத்தில் ஆறு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்தாலும், பின்னர் கடந்த 2014ம் ஆண்டு இரட்டை மடிப்பு வலைகளை பயன்படுத்துவதில் சில நிபந்தனைகளோடு கூடிய அனுமதியை வழங்கியது. இரட்டை மடிப்பு வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் சங்கத்தின் தரப்பில் தொடர்ந்த மனுவை, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவுக்கு எதிராக மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் வாதத்தில், ‘‘மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இரட்டை மடிப்பு வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதில் 5 கிமீ சுற்றளவுக்குள் இரட்டை மடிப்பு வலையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என கூறினார். இதைக்கேட்ட நீதிபதி, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய மற்றும் தமிழக அரசு ஆகியோர் 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.