இரவு நேர வாகன போக்கவரத்து தடை: நோயாளியுடன் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக – கர்நாடக எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் சிக்கித் தவித்தது.
திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரை 23 கிலோமீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இரவு நேர வாகன போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப் படாததாலும் காலை 6 மணிக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வனச்சாலையில் செல்ல அனுமதிப்பதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
image
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு கோவை செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் தமிழக கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது.
இதையடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கும்; மேலாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அங்கிருந்த வனத்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி உதவினர். இதைத் தொடர்ந்து நோயாளியுடன் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் கோவை நோக்கி புறப்பட்டுச் சென்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.