உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்: பெற்றோரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி: உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார். உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் பலியானார். உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.