சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை : சிறப்பு புலனாய்வு குழு

மும்பை : சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் தன் நண்பர்களுடன் போதை விருந்தில் கலந்து கொண்டார். ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் சமீர் வாங்கடே அவரை விடுவிக்க பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு மாதம் சிறையில் இருந்த ஆர்யன் கான் ஜாமீனில் வெளிவந்தார். விசாரணையில் இருந்து சமீர் விடுவிக்கப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை எனக் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆர்யன் கானிடம் போதை பொருள் பறிமுதல் செய்யப்படாவிட்டாலும் போதைப் பொருள் உட்கொண்டதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்பது இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சமீரின் விசாரணையில் பல சந்தேகங்களையும் சிறப்புக் குழு எழுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.