படம் பார்த்து மனம் மாறினார் எதிரி நடிகையை பாராட்டிய கங்கனா

மும்பை: படம் பார்த்துவிட்டு மனம் மாறிய கங்கனா ரனவத், தனது எதிரி நடிகையை பாராட்டியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தபோது, பாலிவுட்டில் நெப்போடிசம் அதிகரித்து விட்டதாக குரல் எழுந்தது. இதனாலேயே சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்ததாக பலரும் குற்றம்சாட்டினர். அதில் கங்கனா ரனவத்தும் ஒருவர். குறிப்பாக நடிகை அலியா பட்டை தாக்கி அப்போது கடும் விமர்சனங்கள் செய்திருந்தார் கங்கனா. இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், நடிகை பூஜா பட்டின் தங்கை என்பதாலேயே அலியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாக கங்கனா புகார் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடிக்க அலியா சரியான தேர்வு கிடையாது என்றும் கங்கனா வசைபாடியிருந்தார். இந்நிலையில் இந்த படம் ரிலீசான நிலையில் தனது கருத்திலிருந்து மாறுபட்டிருக்கிறார் கங்கனா. அவர் கூறுகையில், ‘தென்னிந்திய படங்கள்தான் இப்போதும் பாலிவுட்டில் நல்ல வசூல் ஈட்டுகின்றன. அதே சமயம், எப்போதாவது இந்தி படங்களும் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் கங்குபாய் கத்தியவாடி படத்தை பாராட்டலாம். பெண் கேரக்டரை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த கேரக்டரின் வலுவை காட்டியுள்ளனர். அலியா நன்றாக நடித்துள்ளார். இது எதிர்பாராத நல்ல படம்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.