தாணுவுடன் இணைந்து ரூ.100 கோடியில் படம் தயாரிக்கிறது இயக்குனர்கள் சங்கம்

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்வர்கள் பதவி ஏற்கும் விழா நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார், விக்ரமன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசியதாவது: இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்காக நான் இயக்குனர் சங்கத்துடன் இணைந்து 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன். எல்லா நடிகர், நடிகைகளும் அதில் நடிக்க வேண்டும், அதில் கிடைக்கும் லாபத்தை இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இயக்குனர் யார்? கதை என்ன? யார் யார் நடிக்கிறார்கள் என்பதை இயக்குனர் சங்கமே முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்மணி பேசியதாவது: தாணுவின் நல்ல திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். முன்னணியில் உள்ள எல்லா நடிகர்களும் பங்கெடுக்கும் வகையில் நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். இந்த படத்தில் வரும் லாபம் திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.

இதுதவிர ஆண்டுக்கு 70 துணை இயக்குனர்கள் குறும்படம் எடுக்க வசதி செய்து தரப்படும். திறமையான இயக்குனர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் படம் இயக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும். இதற்காக இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு கதைகளை தேர்வு செய்து வருகிறது. முதல் கட்டமாக பத்து படங்களை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு இனி துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்களுக்கு சங்கம் வழியாக சம்பளம் பெற்றுத் தரப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.