பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்வு? -அமைச்சர் சொல்வது இதுதான்!

உக்ரைன் -ரஷியா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சில தினங்களுக்கு முன் ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியத்துறை
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்படவில்லை. தேர்தல் காரணமாகவே எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தியதாக கூறுவது தவறு.

சர்வதேச சந்தைதான் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கிறது. ஆனாலும், நாட்டில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியும். நமது தேவைகளில் 85 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும், 50-55 சதவிகிதம் எரிவாயுவையும் சார்ந்திருக்கிறது. எனினும் நமது ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.