உயிரின் மதிப்பை உணர்ந்த பெண் தலைமை காவலர் – குவியும் பாராட்டுக்கு என்ன காரணம்?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல உதவிய பெண் தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வரக்கூடிய நிலையில், தமிழக காவல் துறையிலும் சாதித்து வருகின்றனர். தமிழக காவல்துறையில் 21 சதவீதம் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடப்பதாக கடந்த 7-ம்தேதி காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு வந்த பெரியமேடு ரோந்து வாகன தலைமை காவலர் லீலாஸ்ரீ, ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தார். ஆனால்,ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்திற்கு வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மயங்கி விழுந்த நபரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.
image
இதைத் தொடர்ந்து இறந்த நபரின் உடலை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு கூட பொதுமக்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் தலைமை காவலர் லீலாஸ்ரீ மற்றும் காவலர் ஒருவர் இறந்தவரின் உடலை தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுதது காவலர் லீலாஸ்ரீ, உயிரிழந்த ரமேஷின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது பரகத்துல்லா பெண்கள் தினத்தன்று லீலாஸ்ரீயை அழைத்து பாராட்டி பரிசளித்தார். இதையடுத்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு எனது கணவர் இறந்து விட்டதால் ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது தனக்கு தெரியும் என தலைமை காவலர் லீலாஸ்ரீ காவல்துறை அதிகாரிகளிடம் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.