ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போரைத் தொடங்கின. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் ஏற்கெனவே மூன்றுமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இரண்டுமுறை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்ய அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்தைக்குழு நடத்திய மூன்றாவது பேச்சுவார்த்தையை கடந்த 7-ம் தேதி பெலாரஸில் நடத்தியது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய ரஷ்யக்குழுத் தலைவர் மெடின்ஸ்கி, “மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அரசியல் மற்றும் ராணுவம் குறித்த உரையாடல்கள் நடைபெற்றன. ஆனாலும் எங்களது எதிர்பார்ப்புகள் ஏதும் பேச்சுவார்த்தையில் நிறைவேறவில்லை. அடுத்தமுறை இன்னும் குறிப்பிடத்தகுந்த முடிவுகள் எடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, “மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. மனிதாபிமான அடிப்படையில் சிறிய நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிப்படை அரசியல் நிலைப்பாடுகள் குறித்த தீவிர ஆலோசனைகள், பாதுகாப்பு விதிமுறைகளின்படி தொடர்கின்றன” என உக்ரைன் அதிபரின் அலுவலக ஆலோசனைத் தலைவர் போடோலியாக் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாஸ்கோவில் நடந்த இராணுவ பிரசாரத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில், `சில நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ என எங்கள் பேச்சுவார்த்தை குழு என்னிடம் தெரிவித்தது. இப்போது கிட்டத்தட்டத் தினசரி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன” என்று கூறினார்.