லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க முடிவு: பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர வாய்ப்பு

புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அதிகாரத்தை கடந்த 2017-ம் அண்டு மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு தினமும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அடிக்கடி விலை அதிகரிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து ரூ.110 வரை விற்கப்பட்டது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது. அதன் பிறகு பெட்ரோல்-டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டதால் அதன் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இன்றுடன் 127-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயராமல் உள்ளது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்கப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 139 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பிறகு இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. இந்த ஆலோசனையில் பெட்ரோல்-டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்த்தலாம் என்று முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து இன்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

பெட்ரோல்-டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தாமல் தினமும் 50 காசுகள் என்ற அளவில் படிப்படியாக உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.