வீடு தேடி வரும் ரேஷன் – குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கேரள மாநில பட்ஜெட்டில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான மாநில நிதி நிலை அறிக்கையை, நிதித் துறை அமைச்சர் கே.என். பாலகோபால், சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பழங்குடியினர் பகுதிகளில் தற்போது நடமாடும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக பொது வினியோகத் துறைக்கு 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.

நடமாடும் ரேஷன் கடை
என்பது அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சேகரித்து நியமிக்கப்பட்ட மையத்தில் வழங்கும் திட்டமாகும். ஒவ்வொரு பகுதிக்கும் வாகனம் வரும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.