கண்கலங்கிய ஜெயக்குமார் முதல் உதயநிதியிடம் உரிமை கொண்டாடிய காந்தி மகன் வரை..! – கழுகார் அப்டேட்ஸ்

முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி ஒருவரின் பேத்தியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘என் 12 வயது மகள் லிஃப்டில் செல்லும்போது, அதே லிஃப்டில் நாயுடன் வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, நாயைக் காட்டி என் குழந்தையை பயமுறுத்தினார். அதோடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பிலும், என் குழந்தைக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அந்த முன்னாள் அதிகாரி மெசேஜ் அனுப்பியுள்ளார். எனவே, அந்த முன்னாள் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் செல்வாக்கை அண்ணாநகர் சரக காவல்துறையினரிடம் காட்டிவருவதால் சம்பந்தப்பட்ட ஏரியா காக்கிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

மார்ச் 12 காலை 7 மணிக்கு நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவருகிறார். முன்னதாக சிறையிலிருந்து வந்த ஜெயக்குமாரை அவரது வீட்டுக்குச் சென்று நேரில் சந்தித்த பன்னீர், எடப்பாடி ஆகியோர், “தி.மு.க-வுக்கு எதிராக நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டதாலேயே இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது.

அதிமுக

அதைப் புரிந்துகொண்டு இனி நீங்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். கழகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் ஜெயக்குமார், “ஆமாங்க அண்ணே… திட்டமிட்டே என்னை ஜெயில்ல தள்ளிட்டாங்க. உள்ள எனக்கு நல்ல சாப்பாடு, தண்ணிக்கூட தரலை… உடம்பெல்லாம் அலர்ஜி ஆயிடுச்சு அண்ணே…” என்று கண் கலங்கினராம். ஒருவழியாக அவருக்கு ஆறுதல் சொல்லி திருச்சிக்கு வழியனுப்பியிருக்கிறார்கள் இரட்டையர்கள்!

மேயர், துணை மேயர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல்கள் முடிந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மாநகராட்சியிலும் மண்டலத் தலைவர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்திருக்கிறது. சென்னையில் கவி கணேசன், சிற்றரசு, ஸ்ரீதனி, ராமலிங்கம், தனசேகரன், காங்கிரஸ் கட்சியின் சிவ ராஜசேகரன், வி.சி.க-விலிருந்து யாழினி உள்ளிட்டோர் மண்டலத் தலைவர் பதவிக்காக முட்டி மோதிவருகிறார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் மண்டலத் தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் யாக்கூப், எஸ்.ஆர்.ராஜா மைத்துனர் காமராஜ், பெருங்களத்தூர் சேகர், எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் சகோதர ஜோசப் அண்ணாதுரை, சுயேட்சை வேட்பாளர் பிரதீப் சந்திரசேகர், லிங்கேஸ்வரி, டி.ஆர்.கோபி ஆகியோர் தீவிரமாக காய்நகர்த்திவருகிறார்கள். இவர்களில் பலரும் மேயர், துணை மேயர் பதவிக்கு முயற்சி செய்து கிடைக்கப் பெறாதவர்கள் என்பது கூடுதல் தகவல்!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையுடன் இணைந்து அமைச்சர் காந்தியின் மகன் வினோத் மார்ச் 12-ம் தேதி வேலை வாய்ப்பு முகாமை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட உதயநிதி முன்னிலையில் பேசிய வினோத், “உதயநிதி என் கல்லூரி நண்பன்” என்றார். உடனே, உதயநிதியின் அருகில் அமர்ந்திருந்த காந்தி எதுவுமே தெரியாததுபோல, “அப்படியா?” என்று உதயநிதியிடமே கேட்க… “ஆமாம், வினோத் ஒரு வருடம் சீனியர்; நான் ஜூனியர்” என்று கூறி புன்னகை செய்தார். இதுபற்றி பேசும் உடன்பிறப்புகளோ, “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி சீட்டுக்காக அமைச்சர் காந்தி தரப்பினர் இப்போதே துண்டு போடுகிறார்கள்.

திமுக

அமைச்சர் எ.வ.வேலுவின் துணையோடு ஜெகத்ரட்சகனை ஓரங்கட்டிவிட்டு, தன் மகன் வினோத்துக்காக அரக்கோணம் எம்.பி சீட்டுக்கு காய்நகர்த்துகிறார் அமைச்சர் காந்தி” என்று கிசுகிசுக்கிறார்கள்!

கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தனி அலுவலகம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படி அலுவலகம் ஒதுக்கப்படாதது கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ககன் தீப் சிங் பேடி

இதுகுறித்து அவர்கள் கேட்டபோது, “இப்போது இருக்கும் நிதி நிலையில், கவுன்சிலர்களுக்கு தனியாக அலுவலகம் ஒதுக்க முடியாது” என்று மறுத்துவிட்டாராம் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி. இதையடுத்து, “பொதுமக்கள் எங்கே வந்து குறைகளை சொல்வார்கள்?” என்று கவுன்சிலர்கள் குமுறினாலும், அதிகாரிகள் சிலர், “இவங்க கட்டப்பஞ்சாயத்து செய்யறதுக்கு கவர்மென்ட் செலவுல ஆபீஸ் எதுக்கு?” என்று கமென்ட் அடிக்கிறார்கள்!

அ.தி.மு.க தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்யா தி.மு.க-வில் இணையவிருப்பதாக சமீபத்தில் பேச்சு எழுந்தது. இதுகுறித்து கட்சியின் சீனியர்கள் சிலர் நேரடியாகவே சத்யாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, “நான் எதுக்குண்ணே அங்க போகப்போறேன். நமக்கு எப்பவும் அ.தி.மு.க தான்” என்று பதிலளித்திருக்கிறார் சத்யா.

தி.நகர் சத்யா

இதுதொடர்பாக சத்யா, எடப்பாடி பழனிசாமியிடமும் பேச… அவர் முகம் கொடுத்து பேசவே இல்லையாம். “தி.மு.க குடும்பத்துடன் சத்யா காட்டும் தொழில் நெருக்கத்தால்தான், இப்படியொரு சந்தேகம் எழுந்திருக்கிறது” என்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்!

திருப்பூர் தி.மு.க-வில் உட்கட்சி பூசல் பற்றியெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதிக்காக இளைஞரணி பதவியை விட்டுக்கொடுத்த கட்சியின் சீனியரான வெள்ளக்கோவில் சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவியை தன் ஆதரவாளரும், மாவட்டப் பொறுப்பாளருமான இல.பத்மநாபனுக்கு வாங்கிக் கொடுக்க தீவிரமாக செயல்பட்டார்.

வெள்ளக்கோவில் சாமிநாதன்

ஆனால், கடைசி நேரத்தில் மேயர் பதவி உதயநிதியின் ஆதரவாளரான தினேஷ்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்செட்டான வெள்ளகோவில் சாமிநாதன், மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். அதோடு, தினேஷுக்கு எதிராக அரசியல் செய்ய திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜுடன் ரகசியமாகக் கைகோத்துள்ளாராம். இத்தனை நாட்கள் எதிரும் புதிருமாக அரசியல் செய்துவந்த சாமிநாதனும் செல்வராஜும் இப்போது இணைந்துள்ளார்கள் என்பதுதான் இந்த விவகாரத்தின் ட்விஸ்ட்!

உள்ளாட்சிப் பதவிகளில் வெற்றிபெற்ற பலரும் மரியாதை நிமித்தமாக தத்தமது மாவட்டச் செயலாளரை பார்த்து வாழ்த்து பெற்ற நிலையில், திருத்துறைபூண்டி நகராட்சி சேர்மனாக வெற்றிபெற்ற கவிதாவும், கவுன்சிலராக வெற்றிபெற்ற அவரின் கணவர் ஆர்.எஸ்.பாண்டியனும் திருவாரூர் தி.மு.க மாவட்டச் செயலாளரான பூண்டி கலைவாணனை சென்று சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். இதுபற்றி பேசும் உள்ளூர் உடன்பிறப்புகள், “திருத்துறைபூண்டி நகராட்சியில் துணைத் தலைவர் பதவிக்காக பாண்டியன் தீவிரமாக செயல்பட்டார். ஆனால், மனைவி நகராட்சித் தலைவராகவும், கணவர் துணைத் தலைவராக இருந்தால் கடும் விமர்சனங்கள் எழும் என்பதால் கட்சித் தலைமையிடம் பேசிய மா.செ. பூண்டி கலைவாணன், அந்தப் பதவியைக் கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-க்கு தள்ளிவிட்டார்.

பூண்டி கலைவாணன்

பதவி கிடைக்காத கோபத்தில்தான் பூண்டி கலைவாணனை சந்திக்காமல், அவருக்கு எதிராக அரசியல் செய்துவரும் எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்று, உள்ளடி அரசியல் செய்கிறார்கள் கவிதா – பாண்டியன் தம்பதியர். இந்த பூசல் விரைவில் பெரிதாக வெடிக்கலாம்” என்கிறார்கள்!

சசிகலா சுற்றுப்பயணம் செல்லும் ஊர்களின் பட்டியலில் சேலமும் சேர்ந்திருக்கிறதாம். இந்தத் தகவல் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்குச் செல்ல… மனிதர் டென்ஷனாகிவிட்டார். உடனடியாக தன் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியவர், ‘சேலத்துக்கு சசிகலா வருவதையொட்டி நிர்வாகிகள் யாரும் தங்களுக்குள் கூட்டம் போட்டு பேசக் கூடாது; சசிகலாவைச் சென்று பார்க்கக் கூடாது.

சசிகலா

ஒருவேளை சசிகலாவே போன் செய்து பேசினாலும் பேசக் கூடாது. குறிப்பாக, புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் போனை எடுக்கக் கூடாது. யாராவது கட்சி விதிகளை மீறினால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று சேலத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார். இதுபற்றி பேசும் எடப்பாடியின் எதிர்கோஷ்டினரோ,“எடப்பாடி என்னதான் கட்டுப்பாடு விதிச்சாலும், அவரோட சொந்த ஊரான எடப்பாடியிலயே ஒரு கோஷ்டி சசிகலாவை சந்திக்க ரெடியா இருக்கு… இதை அவர் எப்படி தடுக்கப் போறாருன்னு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள்!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகு மொழி பாடகரான உதயதேவன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்து மேலூர் ஒன்றியச் செயலாளர் பதவியைப் பெற்றவர்; அதிகரட்டி பேரூராட்சியின் தலைவராகவும் இருந்தவர். இம்முறை அதிகரட்டி பேரூராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தயவில் துணைத்தலைவர் பதவியை எதிர்பார்த்து சீட் வாங்கியவர், தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ‘‘பேரூராட்சி கவுன்சிலராகக்கூட ஜெயிக்க முடியாதவருக்கு எதுக்கு ஒன்றியச் செயலாளர் பதவி?” என்று உள்ளூர் கட்சி நிர்வாகிகள் இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திவருகிறார்கள். இதையடுத்து, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமைச்சரிடமே சரண் அடைந்திருக்கிறார் உதயதேவன்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.