ஆராய்ச்சிக் குழுவுடன் ஆலோசனையில் நாக் அஸ்வின்

நடிகையர் திகலம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படமான 'பிராஜக்ட் கே' படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்காக மிகவும் மாடர்ன் டெக்னாலஜியுடன் கூடிய வாகனங்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி செய்தால் நாட்டுக்குப் பெருமையாகவும் இருக்கும் என்றும் பிரபல மோட்டார் வாகன தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவுக்கு பத்து நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தார் நாக் அஸ்வின். அவரது கோரிக்கையை ஏற்ற ஆனந்த் மஹிந்திரா அதற்கு உதவி செய்வதாகத் தெரிவித்து அவரது குழுமத்தின் சர்வதேச தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் வேலு மஹிந்திரா உதவுவார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வாலி–க்கு நாக் அஸ்வின் சென்றுள்ளார். அங்கு வேலு மஹிந்திராவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “ 'கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி'யை இயற்கை சந்திக்கும். என்ன ஒரு அழகான கேம்பஸ், வேலு மஹிந்திரா குழுவினருடன் எங்களது அழகான பயணம் ஆரம்பம். நன்றி ஆனந்த் மஹிந்திரா சார், இது சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,” என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆனந்த் மஹிந்திரா, “நாக் அஸ்வின், நீங்கள் உருவாக்கும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படம் என்னை இப்போது மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் ஹாலிவுட்டை முறியடிப்பீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது,” என்று வாழ்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.