நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடக்கம்.!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்குகிறது. வழக்கமான நேரத்தில் இரு அவைகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு, பட்ஜெட் தாக்கலுக்குப் பின் கடந்த மாதம் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, இரு அவைகளும் வெவ்வேறு நேரத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது வழக்கம் போல் காலை 11 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தொடரில் மத்தியபட்ஜெட் தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுஉள்ளன. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்டு வரப்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியிட, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள விவகாரத்தையும் முன்வைக்க திட்டமிட்டுள்ளன.மாநிலங்களின் ஆளும் கட்சிகள், ஆளுநருக்கு எதிரான பிரச்னையை எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.