சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு

சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. இந்த வைரசின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது. செவ்வாய்கிழமை (மார்ச் 15, 2022) அன்று வெளியிடப்பட்ட சீனாவின் தொற்று அளவு இன்னும் அந்த நாடு அபாயகரமான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டியது.

தொற்று துவங்கியதிலிருந்து சீனா தனது அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கையை தற்போது பதிவு செய்துள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,280 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிலின் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இது கோவிட்-19 இன் துணை வகையான ஓமிக்ரான் பிஏ.2-வின் வேகமான பரவலை கடுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

2022-ல் பாதிக்கப்பட்டவர்களில் 30% க்கும் அதிகமானவர்கள் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1,87,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஜிலின், அங்குள்ள மக்கள், பிராந்தியத்தை விட்டு செல்லவும், சென்றவர்கள் உள்ளே வரவும், பிராந்தியத்துக்குள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா 

சமீபத்திய சாதனை அளவிலான எழுச்சியால், 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தொழில்நுட்ப மையமான ஷென்சென் உட்பட குறைந்தது 10 நகரங்களிலும் மாவட்டங்களிலும் கோவிட் -19 ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஹைடெக் ஷென்சென் நகரம் அனைத்து சமூகங்களுக்கும், கிராமங்களுக்கும் சீல் வைத்து மக்கள் நடமாட்டத்தை வெகுவாக குறைத்துள்ளது. சமீபத்திய கோவிட்-19 தொற்று அதிகரிப்பால், திங்கள் முதல் ஞாயிறு வரை பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

சீனாவின் கோவிட்-19 கட்டுப்பாடுகள் டொயோட்டா, வோக்ஸ்வாகன் மற்றும் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கானை பாதித்துள்ளது

இரண்டு ஆண்டுகளில் காணப்படாத மிகப்பெரிய கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த சீனா எடுத்துள்ள முயற்சிகள் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான் முதல் வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் வரை அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சில செயல்பாடுகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மேலும் படிக்க | Lockdown : மீண்டும் ஊரடங்கு..! புரட்டிப்போடும் கொரோனா மரணங்கள்! 

சீனாவின் சிலிக்கான் வேலீ என்று அழைக்கப்படும் ஷென்செனில், டஜன் கணக்கான புதிய தொற்று பற்றி தெரிய வந்தபின்னர், வெகுஜன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வுஹானுக்குப் பிறகான  மிகப்பெரிய கோவிட்-19 நெருக்கடியின் விளிம்பில் சீனா உள்ளது

2021 ஆம் ஆண்டு முழுவதும் பதிவானதை விட, இந்த ஆண்டு இதுவரை அதிகமான அறிகுறி கொண்ட கோவிட்-19 தொற்றுகள் சீனாவில் பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தில், பெய்ஜிங் மற்றும் நிதி மையமான ஷாங்காய் ஆகிய இரு நகரங்களில்  புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாயின. இவை இரண்டும் சீனா-வின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கடற்கரையோரம் உள்ள மாகாணங்களான குவாங்டாங், ஜியாங்சு, ஷான்டாங் மற்றும் ஜெஜியாங் ஆகிய இடங்களிலும் தொற்று பதிவானது.

வுஹானுக்குப் பிறகு சீனா தனது மிகப்பெரிய கோவிட் -19 நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019 டிசம்பரில் வுஹானில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வுஹானின் தொடங்கிய தொற்று உலகம் முழுதும் பரவியது. 

24 மில்லியன் மக்களைக் கொண்ட, சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஷாங்காய் நகரில், பல்வேறு மாகாணங்கள் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தொற்று குறைந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சீனாவில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா! 2 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.