சூர்யா ஜோடியாக கீர்த்தியா ?, கிரித்தியா ?

'எதற்கும் துணிந்தவன்' படத்திற்குப் பிறகு சூர்யா அடுத்து யாருடைய படத்தை ஆரம்பிக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி எழுந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெற்றிமாறன் இன்னும் 'விடுதலை' படத்தையே முடிக்கவில்லை. அந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் 'வாடிவாசல்' பக்கம் வருவாராம். அதற்கிடையில் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தை முடித்துவிடலாம் என வேலைகள் பரபரவென நடந்து முடிந்துவிட்டதாம்.

அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் முதலில் வந்தது. ஆனால், தெலுங்கில் தற்போது பிரபலமாகியுள்ள கிர்த்தி ஷெட்டி நடிக்கப் போகிறார் என்ற இன்னொரு தகவலும் வருகிறது. 'உப்பெனா, ஷியாம் சிங்க ராய்' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிரித்தி. இவரை தமிழில் நடிக்க வைக்க ஏற்கெனவே பலர் முயற்சித்து வருகிறார்கள்.

ஒரு முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று கிரித்தி நினைக்கிறாராம். அதனால்தான், சூர்யா படத்தில் கிரித்தி நடிக்க சம்மதித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா ஜோடியாக நடிக்கப் போவது கீர்த்தியா அல்லது கிரித்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.