இன்றைய தொழில்நுட்பத்தால் முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது – நீதிமன்றம்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது என்பதை கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளாறை கோவிலும் சேதப்படுத்தப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
image
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றின் பொங்கல் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோவிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
image
அப்போது நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவல்களைப்போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்டமுடியாது எனத் தெரிவித்தனர். அதனால் பழமையான கோவில்களை முறையாக புனரமைத்து, சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.