உக்ரைன்- ரஷியா போர்: சீன அதிருபடன் ஜோபைடன் இன்று பேச்சுவார்த்தை

உக்ரைன் மீது போரை நடத்தி வரும் ரஷியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்காமல் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தது.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தொலைபேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

இந்த உரையாடலின் போது இதுவரை விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் இருந்து ரஷியாவை சீனா காப்பாற்ற முயன்றால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று ஜோபைடன் எச்சரிக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் கூறும்போது, ‘‘இந்த பேச்சுவார்த்தை மூலம் சீன அதிபரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் அறியும் வாய்ப்பு ஏற்படலாம்.

வர்த்தகம் மற்றும் சர்வதேச வினியோகம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றார்.

ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. மேலும் ரஷியாவுக்கு எதிராக மேற்கு நாடுகளை ஒன்றிணைக்கும் பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டது.

இந்த சூழ்நிலையில் சீனாவிடம் ஆயுத உதவிகளை ரஷியா கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

ரஷியாவுக்கு சீனா நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கா நினைத்தது. இதனால் ஜோபைடன்- ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, ‘‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை ஆதரிப்பதற்கான பொறுப்பை சீனா ஏற்க வேண்டும் என்று ஜோபைடன் இந்த பேச்சுவார்த்தை மூலம் தெளிவுபடுத்துவார்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.