சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியர்…! 101 முறை கத்தியால் குத்தி 30 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மாணவர்..!!

பிருசெல்ஸ்,
பெல்ஜியத்தை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவென்ட்ஸ். இவர் 1990-களில் தனக்கு 7-வயதாக இருந்த போது  மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியரிடம் மாணவனாக இருந்துள்ளார். அப்போது மரியா, குண்டெர் உவென்ட்சை அடித்து அவமானப்படுத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த குண்டெர் உவென்ட்ஸ் 30 வருடங்களுக்கு பிறகு அதற்கு பழிதீர்த்து உள்ளார். தனக்கு அவமானம் ஏற்படுத்திய  ஆசிரியர் மரியா வெர்லிண்டேனை (59) கடந்த ஆண்டு கண்டுபிடித்து 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தனது நண்பரிடம் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அந்த நண்பர் இந்த தகவலை தற்போது போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விசாரணையை  துவக்கிய போலீசார் சம்பவ இடத்தில் கிடைத்த ரத்த மாதிரியை கொண்டு குண்டெர் உவென்ட்ஸ்-யிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர் குற்றவாளி என நிரூபணமானது. கிட்டத்தட்ட கொலை நடந்து 16 மாதங்களுக்கு பிறகு இவரை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர்.
அவரை கைது செய்து விசாரித்து வரும் போலீசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “சிறிய வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை பழிவாங்குவதற்காக கொலை செய்ததாக குண்டெர் உவென்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது ” என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.