5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் பாவனா; வாழ்த்தும் திரையுலகம்!

மலையாளம், தமிழ், கன்னடம் என பலமொழி சினிமாக்களில் பிஸியாக நடித்துவந்தவர் கேரள நடிகை பாவனா. பாவனா கடைசியாக 2017-ல் வெளியான ஆதம் ஜாண் சினிமாவில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்தார். இந்த நிலையில், உலக மகளிர் தினத்தில் `வி த வுமன் ஆஃப் ஆசியா’ கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனம் திறந்தார் பாவனா. சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டதாகவும், அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாய்ப்புக்களை வேண்டாம் என மறுத்ததாகவும் பேசியிருந்தார். அதன்பிறகு மீடியாக்களிடம் சகஜமாக பேசத்தொடங்கிய பாவனா விரைவில் மலையாள சினிமாவுக்கு திரும்பவும் வருவேன் என தெரிவித்திருந்தார்.

பாவனா நடிக்கும் சினிமா டைட்டில் போஸ்டர்

இந்த நிலையில் புதிய மலையாள சினிமா ஒன்றில் பாவனா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ (Ntikkakkakkoru Premondarnn) என்ற சினிமாவில்தான் பாவனா நடிக்க உள்ளார். இந்த சினிமா டைட்டில் போஸ்டரை நடிகர் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பாவனா தனது முகநூல் பக்கத்திலும் சினிமா டைட்டில் போஸ்டரை வெளியிட்டார். ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்கும் இந்த சினிமா படபிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் கதையை மையமாகக்கொண்ட இந்த சினிமாவில் பாவனாவுக்கு ஜோடியாக ஷரபுதீன் நடிக்கிறார். போன்ஹோமி எண்டர்டைமெண்ட்ஸ் பேனரில் இந்த சினிமாவை ரெனிஷ் அப்துல்காதர் தயாரிக்கிறார். ஐந்து வருட இடைவேளைக்குப் பிறகு பாவனா மீண்டும் சினிமாவில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.