அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரல்: ஒருங்கிணைப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவிநீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், அதிமுக பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், கடந்தாண்டு டிசம்பரி்ல் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அதிமுக கட்சிவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தவறு. மாற்றுக்கட்சிகளுக்கு செல்லாத 2016-ம் ஆண்டு அன்று 5 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களைக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து அதில் இருந்து ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும். பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். அத்துடன் இதுதொடர்பாக அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தனர்.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் இதுதொடர்பாக அதிமுக கட்சிதரப்பிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அதிமுக நிர்வாகிகளான தமிழ் மகன் உசேன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத் துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.