இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,075 ஆக குறைந்தது

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்துள்ளது.

ஆனாலும் பாதிப்பு இன்னும் முழுமையாக ஓயவில்லை. அதேநேரம் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து, கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 71 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் மட்டும் 59 பேர் அடங்குவர். மொத்த பலி எண்ணிக்கை 5,16,352 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,383 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 61 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 27,802 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,379 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 5,84,177 டோஸ்கள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 78.22 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 3,70,514 மாதிரிகள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.