கேரளாவில் மகன், மருமகள், 2 பேத்திகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற முதியவர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் தொடுபுழா, சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீத் (வயது 79).

இவரது மகன் அப்துல் பைசல் (45). திருமணமாகி விட்டது. மனைவி ஷீபா (45). இவர்களுக்கு மெஹர் (16), அப்சனா (14) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

அப்துல் பைசலுக்கும், அவரது தந்தை ஹமீதுக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு மூண்டது.

இந்த நிலையில் நேற்று அப்துல் பைசல், அவரது மனைவி ஷீபா மற்றும் மகள்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவில் அவர்களின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்றனர்.

அங்கு அப்துல் பைசல், அவரது மனைவி ஷீபா மற்றும் மகள்கள் 4 பேரும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

இதற்காக தண்ணீர் எடுக்க சென்றபோது, தொட்டியில் இருந்த தண்ணீர் அனைத்தும் காலியாக இருந்தது. தீயில் எரிந்த அப்துல் பைசல் மற்றும் அவரது குடும்பத்தினரை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக தொட்டி தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக அப்துல் பைசல் மற்றும் அவரது மனைவி, மகள்களை உயிரோடு எரித்து கொன்றது, அப்துல் பைசலின் தந்தை ஹமீது என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக மகன், மருமகள் மற்றும் பேத்திகள் இருவரை முதியவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.