பஞ்சாப்பில் 10 அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் பகவந்த் மான் வாழ்த்து

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் இன்று 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு முதல்வர் பகவந்த் மான், டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16ம் தேதி முதல்வராக பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் பதவியேற்று கொள்ளாமல் சுதந்திர போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கார் காலனில் அவர் பதவியேற்றார். மறுநாள் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் டாக்டர் இந்தர்பிர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பஞ்சாப் அமைச்சரவை பதவியேற்றது. 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களான ஹர்பால் சிங் சீமா, டாக்டர் பல்ஜித் கவுர் (பெண் அமைச்சர்) ஹர்பஜன் சிங் ஈடிஓ, டாக்டர் விஜய் சிங்லா, லால் சந்த் கடாருச்சக், .குர்மீத் சிங் மீட் ஹாயர், குல்தீ சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், பிராம் சங்கர் (ஜிம்பா), ஹர்ஜோத் சிங் பைன்ஸ் ஆகிய 10 பேர் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சாப் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டேன். எங்களை தேர்ந்தெடுத்த பஞ்சாப் மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு புதிய மாற்றத்தை கொண்டுவரும். பஞ்சாபின் நேர்மையான அரசாக நமது அரசு அறியப்படும்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவை கூட்டம் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இன்று பகல் 12.30 மணிக்கு கூடியது. இதில் பல முக்கிய திட்டங்கள் கையெழுத்திட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.