பலாலி சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறந்து வைக்கும் இந்திய பிரதமர்



இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மீண்டும்  திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்திய பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது, பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன் அன்றைய எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.

அன்று எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்திய பிரதமர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் இந்தியாவுக்கான விமான சேவைகளும் நடைபெற்றன. கொரோனா தொற்று நோய் காரணமாக விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் நடத்தப்படவில்லை.

இவ்வறான சூழ்நிலையில், பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் திறந்து வைப்பதன் மூலம், அந்த விமான நிலையம் சர்வதேச ரீதியில் அறியப்படும் சர்வதேச விமான நிலையமாக மாறலாம் எனக் கூறப்படுகிறது. 

அதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் பிம்ஸ்டெக் (Bimstec) மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்திய பிரதமர் உட்பட தூதுக்குழுவினர் வரும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக பலாலி விமான நிலையத்தில் தரையிறங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.